நாட்டில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் திருமண வைபவங்களையும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், மண்டபக் கொள்ளளவில் 25 சதவீதமானோருடன் மட்டுமே நடத்த முடியும் என்றும், அதாவது அதிகபட்சமாக 150 பேருடன் திருமண வைபவங்களை நடத்த முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே, ஜூலை 5 – 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.