யாழ்.நல்லுார் ஆலயத்திற்கு அருகில் ஆசிரியர் ஒருவரின் வீட்டை உடைத்து உட்புகுந்து 20 லட்சம் பெறுமதியான நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 4ஆம் திகதி நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள ஆசிரியரின் வீடொன்றில் நகைகள் திருடப்பட்டன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதனடிப்படையில் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் நாவற்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 7 தங்கப் பவுண் தாலிக்கொடி, நெக்ளஸ், ஒரு தங்கப் பவுண் அளவுடைய 3 சங்கிலிகள், 3 சோடி தோடுகள், ஒரு மூக்குத்தி, 2 மோதிரங்கள், பெறுமதி வாய்ந்த அலைபேசி ஒன்று மற்றும் 2 பவுண் தங்க நகையை விற்பனை செய்த சிட்டை என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.