ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டினைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அதன்படி நாடு முழுமையாக திறக்கப்பட்டதும் ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, 18,200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக நாட்டிற்கு கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட வழிவகுத்ததாக அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதேவேளை நாட்டை திறப்பது குரித்து சுற்றுலாத் துறை அபிவிருத்தி குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையில் பணியாற்றுவோரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, நாட்டைத் திறந்து சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதே என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
மேலும் இலங்கையின் மீது பயணத் தடைகளை விதித்துள்ள அந்த நாடுகளின் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாட சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.