வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு – மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கிடைக்கபெற்ற பொதியொன்றிலிருந்து பெருந்தொகையான போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பார்சல் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்திலிருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பொதியை பெற்றுக்கொள்வதற்கு எவரும் வந்திராத காரணத்தினால் அது இன்று தபால் திணைக்கள ஊழியர்கள், இலங்கை சுங்க போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரின் முன்னிலையில் சோதனையிடப்பட்டது.
இதன்போது, அப்பொதியில் படுக்கை விரிப்புகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டிருந்தன.
பொதியிலிருந்து 13,640 மெதம்பிடமைன் அல்லது எக்ஸ்டசி எனப்படும் போதை மாத்திரைகள் மீட்கப்பட்ட நிலையில் அவற்றின் பெறுமதி 13 கோடியே 64 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.