தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கிய சுகாதார பரிசோதகர் மீது மண்வெட்டியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சுகாதார சேவையில் பணியாற்றும் அதிகாரிகளைத் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.