வடக்கில் பல மாவட்டங்களிற்கான தடுப்பூசிகள் இராணுவத்திடமே நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்.
இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
வட மாகாணத்தில் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தேற்றல் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக நான் குறிப்பிட்டதாக சில ஊடகங்களில் இன்று செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மை நிலையினை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
யாழ் மாவட்டத்திற்கு 2வது கட்டமாக தடுப்பூசிகள் வழங்குவதற்கு கடந்த சனிக்கிழமை 3ஆம் திகதி 50,000 சினோபாம் தடுப்பூசிகள் யாழ்மாவட்ட சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 2ஆம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த யூன் மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களால் இராணுவ மருத்துவ குழுக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்கீழ் யூன் மாதம் 5ஆம் திகதி முதல்நாளில் யாழ் மாவட்டத்தில் 9,462 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9,453 பேருக்குமாக, முதல் இரண்டு நாட்களில் 18,915 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அம்மாவட்ட சுகாதார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தடுப்பூசியேற்றும் பணிகள் யூன் மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றன. இதற்கான தடுப்பூசிகள் இராணுவத்தினருக்கே நேரடியாக வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார நடவடிக்கையில் இராணுவத்தின் அதிகரித்த பிரசன்னத்தை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.